Saturday, April 17

பேய்! பிசாசு! ஆவிகள்!! இருப்பது உண்மையா?




இன்றைய நாள்களில் நம்முடன் வாழ்ந்து வரும் நம்மில் சிலருக்கு பேய் பிடிப்பதாக  கூறுவதுண்டு. இன்னும் சிலர் ஆவியுடன் பேசுவதாகச் சொல்கிறார்கள். இன்றும் பில்லி,  சூனியம், செய்வினை ஆகியவற்றிற்கு உள்ளாகி மந்திரவாதிகளை அழைத்துத் தகடு  எடுப்பதையும் பார்க்கிறோம். ஜாதகம், ஜோதிடம் உள்ளிட்ட பல எதிர்காலக் கணிப்புக்கு  பலர் உள்ளாவதைப் பார்க்கலாம். இவையெல்லாம் உண்மையா? அல்லது கற்பனையா? அல்லது  மோசடியா? இது தொடர்பாக அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவு என்ன? என்பன போன்ற  வினாக்களுக்கான விடைகளை இனிக்காண்போம்.
பேய்! பிசாசு! ஆவிகள்!!!

இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் உள்ளிட்ட எல்லா மதத்தாரும் பேய்! பிசாசு! ஆவிகளை!  நம்புகிறார்கள். இந்து மதத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு விசேடமான பேய்!  பிசாசு! இருப்பதும் பூசாரிகளைக் கொண்டு அவற்றை விரட்ட முயல்வதும் பொதுவான  அம்சமாகும்.
கிறிஸ்துவ மதத்தின் புனித நூலாகக் கருதப்படும் பைபிளிலும், இஸ்லாம் மதத்தின்  புனித நூலாகக் கருதப்படும் குர் ஆனிலும் பேய் ! பிசாசுகள் ! உண்டு. இன்றும்  தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கிறிஸ்துவ மத போதகர்களால் சரீரசுகமளிக்கும்  கூட்டங்களில் பேய் விரட்டும் நிகழ்ச்சிகளும் உண்டு.
கத்தோலிக்க மதத் தலைவர் போப் அண்மையில் பேய் விரட்டலுக்குச் சில நெறிமுறைகளை  அறிவித்திருக்கிறார். ஏர்வாடி ஊரிலுள்ள முஸ்லீம் தர்கா பேய் விரட்டலுக்கு பிரபலமான  இடமாகக் கூறப்படுகிறது. இந்தப் பேய் விரட்டல் போட்டியில் வெற்றி பெற்றவர் யார்  என்று சொல்ல முடியாத வண்ணம் மூன்று மதத்தைச் சார்ந்தவர்களாலும் பேய் விரட்டல்  இன்னும் நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
தற்கொலை செய்துக்கொண்டவர்கள் :
பிறரால் கொல்லப்பட்டவர்கள், விபத்தால் இறந்தவர்கள் ஆகியோரே- பேயாக! ஆவியாக!  உலவுவதாக பொதுவாக நம்பப்படுகிறது. விபத்தால் அல்லது உணவுக்காக கொல்லப்படும் ஆடுகள்,  கோழிகள், மாடுகள் போன்ற பிராணிகள் ஆவியாக பேயாக உலவுவதாகப் பொதுவாக யாரும்  நம்புவதில்லை. இதுபோல் கொல்லப்படும் தாவரங்கள் பேயாக ஆவியாக உலவுவதாக யாரும்  நம்புவதில்லை. இந்தப் பேய்! பிசாசு! ஆவிகள்!! யாரைத் தொந்திரவு செய்கின்றன  தெரியுமா? படித்த அய்.பி.எஸ். ஆதிகாரிகளை, மருத்துவர்களை , பொதுவாக படித்த ஆண்களை  தொந்திரவு செய்வதில்லை. அதே போல் பார்ப்பன ஆண்களையும், பெண்களையும் தொந்திரவு  செய்வதில்லை. இன்று வரை இவர்களை எல்லாம் ஏன் பேய்! பிசாசு! ஆவிகள்! தொந்திரவு  செய்யவில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதே பேய்! பிசாசு! ஆவிகள்!! கிராமப்புற மக்களை, அதிலும் படிப்பு அறிவு  இல்லாதவர்களை, அதிலும் பெரும்பாலும் பெண்களையே தொந்திரவு செய்வது ஏன்? இவையெல்லாம்  தந்தை பெரியார் இந்நாட்டு மக்களைப் பார்த்து எழுப்பிய கேள்விகளாகும்.
அடுத்து இந்தப் பேய் பிசாசு ஆவிகள் ஆகியவற்றின் தொந்திரவுக்கு உள்ளானவர்கள்  நிலையைப் பார்ப்போம்:
இவர்களில் சிலர் பேய்! பிசாசு! ஆவியைப் பார்த்ததாகவும், சலங்கை ஒலியைக்  கேட்டதாகவும், கடவுள் காட்சி கொடுத்ததாகவும் சொல்லுவார்கள். இவர்கள் பொய்  சொல்லவில்லை. தாம் உணர்ந்ததைச் சொல்கிறார்கள். எனவே இவர்களைப் பொய்யர்கள் என்று  அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டியதில்லை. அப்படியென்றால் இவையெல்லாம் உண்மையா?
அதாவது பேய்! பிசாசு! ஆவிகள்!! இருப்பது உண்மையா? என்ற கேள்விகள் எழலாம்.மேற்  சொன்னவை எல்லாம் புலன்களை ஏய்க்கும் உணர்ச்சிகளே! (Deceptive perceptions ) ஆகும்.  இவற்றை அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் மூன்று வகையாகப் பிரிக்கின்றன.
1- மாயப்புலன் உணர்ச்சி. (IIIUSION )
2- மயக்கப்புலன் உணர்ச்சி. ( HALLUCINATION )
3- மருட்சி. (DELUSION )
1- மாயப்புலன் உணர்ச்சி:
கண், காது, மூக்கு, உள்ளிட்ட அய்ந்து புலன் உணர்ச்சிகளின் அடிப்படையில் மாய  உணர்ச்சிகள் அய்ந்து வகையாகப் பிரிக்கப்படுகின்றன. நல்ல வெயிலில் நீண்ட தார்ச்  சாலையில் நடக்கும் போது மிகத் தொலைவில் நீர் இருப்பது தெரியும். உண்மையில்  இருக்காது. இதனைக் காணல் நீர் என்பர். இது கண் உணரும் மாயக் காட்சியாகும்.  நெல்லிக்காய் தின்றபின் நீரைக் குடித்தால் இனிப்பது போல் உணர்பவர். அதனால் நீர்  இனிப்பாகாது. இது நாக்கின் ஒருவகை மாய உணர்ச்சியாகும். இதுபோல் மாய உணர்ச்சிகளை  நமது அய்ம்புலன்கள் உணர வாய்ப்பு உண்டு. சரியான ஆய்வின் மூலம் இந்த மாய உணர்ச்சிகளை  வெளிப்படுத்தலாம்.
2-மயக்கப் புலன் உணர்ச்சி:
இயற்பியல் (Phygics ) வேதியல் (Chemistry ) உயிரியல் (Biology ) மற்றும் உளவியல்  (Psychological ) காரணங்களால் உண்டாகும் உணர்ச்சிகளே மயக்கப் புலன்  உணர்ச்சிகளாகும்.
3- சிறு பிள்ளையிலிருந்து பொய்யான கருத்துக்களை மனதில் திணித்து வந்ததன் விளைவாக  ஏற்படுவதே மருட்சியாகும். பேய், பிசாசு, ஆவிகள், ஜோதிடம், கைரேகை, மறுபிறப்பு,  மந்திரம் போன்றவையெல்லாம் இந்த மருட்சியில் அடங்கும்.
இயற்பியல் காரணங்களால் உண்டாகும்
மயக்கப்புலன் உணர்ச்சி:
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வால்டர்ஹெஸ், மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த ஜே. டெல்காடோ ஆகியோர் மின் துடிப்புகள் (Electric Impulses ) மூலம்  மூளையில் பல்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகளை (Controls ) தூண்டிவிட்டு சினம்,  அச்சம், பசி, வருத்தம், துக்கம், துயரம், எக்களிப்பு, காதல், காமம், ஆர்வம்,  ஆக்கிரமிப்பு, உணர்ச்சி, நட்பு, விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம்- போன்றவற்றை  சாதாரண நடைமுறையில் வாழ்வில் உணர்வது போல் செயற்கையாகத் தூண்டும் முயற்சியில்  வெற்றி பெற்று அதனைப் படைத்துள்ளார்கள்.
தாளக்கட்டமைந்த பறையோசை, சீராகக் கைத்தட்டும் ஓசை, மந்திர உச்சாடணம், பண்ணோடு  இசைந்த பாடல், பாடல் ஒப்புவித்தல், ஒலி முழக்கமிடல், நடனம், அங்க அசைவுகள்,  கண்களில் மாற்றி மாற்றி வெளிச்சத்தையும் இருட்டையும் உண்டாக்குதல், ஒரு பொருளை  உற்று நோக்கல், ஜோதி, படிகம் (Crystal ) மை போன்றவற்றை உற்றுநோக்கல், போன்ற  செயல்கள் மூலம் மயக்கப்புலன் உணர்ச்சி அனுபவங்களை உண்டாக்க முடியும்.”பேய்” ஆட்ட  அங்க அசைவுகள், மிகச் சுழிப்புகள், காலடியாட்டம், கரக ஆட்டம், ஆலய பூசை, அங்க  அசைவுகள், பெந்த கோஸ்ட் என்னும் கிறிஸ்துவப் பிரிவினரின் பக்தி அசைவுகள் , உடல்  முறுக்கு நடனம், பாப் இசை நடனம்- போன்றவை நரம்பு மண்டல இயக்கத்தின் சத்த  இசைத்தூண்டல்களே ( Rythamical Stimulations of the nervous system ) ஆகும்.
வேதியல் காரணங்களால் தோன்றும் மயக்கப்புலன் உணர்ச்சி:
தொல்பழங்காலம் முதல் கள், சாராயம், கஞ்சா, அபின், ஊமத்தை விதை- ஆகியவற்றினை  உட்கொண்டு மயக்கக் காட்சிகளை நாமே உருவாக்கிக் கொள்ளும் நுட்பங்களை நம் முன்னோர்கள்  தெரிந்து வைத்து இருந்தனர். அண்மைக் காலத்தில் எல்.எஸ்.டி., மாரிஜினோ ஹிராயின்,  மெஸ்காலின், போன்ற போதை மருந்துகள் மூலம் இத்தகைய மயக்கக் காட்சிகளை அனுபவித்து  சீர்செய்ய இயலாத அளவுக்கு உடலைப் பலர் சீரழித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சென்னை முத்து முதலி தெருவில் உள்ள பாலாஜி
கோயிலில் பூசை  பிரசாதத்தை உட்கொண்ட பக்தர்கள் புதுவகையான
பக்திப் பரவசவத்தில் ஆழ்ந்து  வந்தார்கள். 07-05-1963-இல். இந்தக் கோயிலின் தலைமை அர்ச்சகர் 3,960 கிராம் கஞ்சா  வைத்து இருந்ததற்காக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது பூஜை  பிரசாதத்தில் கஞ்சாவைத் தாம் கலந்த செயலை ஒப்புக் கொண்டார்.
உயிரியல் காரணங்களால் தோன்றும் மயக்கப்புலன் உணர்ச்சி:
மனிதர்களின்  குறிப்பிட்ட வித்தியாசமான நடத்தைப் போக்குகள் அவர்கள் உடலில் உள்ள குரோமோசோம்கள்  (Chromosomes ) உடன் தொடர்புடையவை என்று கனடா நாட்டைச் சேர்ந்த ஆர்லண்டோமில்லரும்,  பேரா ஆலன்பிஷரும் கண்டுபிடித்துள்ளனர். உடலில் சிலவகை வைட்டமின்கள் நொதிகள்  (Enzymes ) போன்ற பற்றாக்குறையின் காரணமாக மனக் கோளாறுகள் உண்டாக முடியும்.  வைட்டமின் “பி”- குறைவின் காரணமாக பெரி பெரி என்னும் மனநோய் உண்டாகும். மனப்  பிறழ்வான நடத்தை இந்த நோயின் இன்றியமையாத அறிகுறிகளாகும். வைட்டமின் குறைவால்  ஏற்படும் நோய்களில் ஒன்று பெல்லாக்ரா ஆகும். உடலில் உள்ள சில சுரப்பிகளின் கோளாறு
காரணமாகவும் சில மனநோய்கள் உண்டாகும். எண்டாக்கிரினல் சுரப்பிக் (Endocrinal Gland  ) கோளாறு காரணமாக ஒரு குறிப்பிட்ட மனநோய் உண்டாகும். பாராதைராய்டு சுரப்பி  (Parathyroid Gland ) குறைவாகச் சுரப்பதால் மயக்கக் காட்சிகள் அதிகம் தெரியும்.
உளவியல் காரணங்களால் தோன்றும் மயக்கப் புலன் உணர்ச்சிகள்:
மனித மனமானது கருத்தேற்றங்களினால் (Suggetions ) பாதிக்கப்படக்கூடும் என்பது  உளவியல் உண்மையாகும். இத்தகைய கருத்தேற்றங்கள் தன் கருத்தேற்றம் (Auto – Suggestion  ) அல்லது தன்வசியம் (Auto – hypnosis ) என்றும் இரு வழியில் நடைப்பெறும். மதக்  கருத்துக்கள் ஊட்டுதலும், மூளைச்சலவை (Brain Washing ) செய்தலும் மெதுவான  தொடர்ச்சியான மன வசிய முறையாகும்.
பேய்! பிசாசு! ஆவி! தொடர்பான மன வசிய முறையில் சிறு பிள்ளையிலிருந்தே  மனத்திற்குள் திணிக்கப்படுகின்றன.பேய் பிடித்தவரைப் போல் பிதற்றுதல், அயல் மொழியில்  பேசுதல், சாமி வந்து ஆடுதல்- போன்றவை எல்லாம் மேற்சொன்ன கருத்தேற்றங்களின்  விளைவுகளே ஆகும். இதில் பேய் பிடித்து அயல் மொழியில் பேசுபவர் குளோசோலேலியா  (Clossolalia ) என்னும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர்கள் வாயில் அயல்  மொழி போல் வெளிப்படுவது உண்மையில் அயல் மொழி அல்ல என்பதனை அந்தக் குறிப்பிட்ட மொழி  தெரிந்தவரை அருகில் வைத்து நிருபிக்கலாம்.
சாதாரணமாகக் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக் கண் மருத்துவரை அணுகுவர். தோல்  நோய் சம்பந்தப்பட்ட நோய்களுக்குத் தோல் நோய் மருத்துவரை அணுகுவர். காது  சம்பந்தப்பட்ட நோய்களுக்குக் காது மருத்துவரை அணுகுவர். ஆனால் மனம் சம்பந்தப்பட்ட  நோய்களுக்கு மனநோய் மருத்துவரை அணுகாமல் பேய்! பிசாசு! ஆவி விரட்டும் செயலில்  ஈடுபடுவது அறிவுடமையாகுமா?
அய்.ஏ. எஸ்., அய்.பி.எஸ்., மருத்துவர்- ஆகியோரை பேய்! பிசாசு! ஆவி பிடித்து ஏன்  ஆட்டுவதில்லை? பாபார்ப்பன ஆண்களை, பெண்களை ஏன் இவை ஆட்டுவதில்லை? எனவே இனிமேலும்  பேய்! பிசாசு! ஆவி! மூட நம்பிக்கைகளுக்கு நாமும் பலியாகாமலும், மற்றவரையும்  பலியாகாமல் காப்பதும், முக்கிய மனித நேயக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
மனநோய் மருத்துவரைப் பைத்தியம் பிடித்தவர் மட்டுமே அணுக வேண்டும் என்ற தவறான  கருத்து மக்களிடையே நிலவிவருகிறது. அதைப் போக்கி மனநோய் மருத்துவரை நாடுமாறு  அறிவுறுத்த வேண்டும்.
மருட்சி :
சிறு பிள்ளையிலிருந்து பொய்யான கருத்துக்களை மனதில் திணித்து வந்ததன் விளைவாக  ஏற்படுவதே மருட்சியாகும். பேய், பிசாசு, ஆவிகள், ஜோதிடம், கைரேகை, மறுபிறப்பு,  மந்திரம், போன்றவையெல்லாம் இந்த மருட்சியில் அடங்கும். மேற் சொன்னவற்றிலிருந்து  படிப்பு அறிவு இல்லாத கிராம மக்களே பெரும்பாலும் பேய்! பிசாசு! ஆவி!  தொந்திரவுகளுக்கு உள்ளாவதன் காரணங்கள் தெளிவாகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கும்  கிராமங்களுக்குப் பகுத்தறிவாளர் குழு நேரில் சென்று ஆய்வு செய்ததும் உண்டு.

உதாரணமாக ஆந்திர மாநிலத்தில் 1983 – இல் மேடக் மாவட்டத்தில் பனிமதி!! (Banimathi  ) என்ற பெயரில் பேய்! பிசாசு! பில்லி! சூனியங்களுக்கு- பல கிராமங்களில் மக்கள்  பலியாகி, பலர் உயிருடன் எரிக்கப்பட்டும், சிலர் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி  மக்களை ஏமாற்றி பணம் பறிக்க- மாவட்ட காவல்துறைக்கு இது ஒரு பெரும் சட்ட ஒழுங்கு  பிரச்சனையாகி விட்டது. உடனே மாவட்ட காவல் அதிகாரி விஜயவாடாவில் உள்ள நாத்திக  மைய்யத்திற்கு அழைப்பு விடுத்தார். அங்கிருந்த ஒரு நோய் மருத்துவர், இரண்டு பொது  மருத்துவர்கள், ஒரு இயல்பியல் அறிஞர், ஒரு சமூகவியல் அறிஞர், ஒரு மனோவசிய அறிஞர்,  ஒரு மாஜிக் நிபுணர், மற்றும் சில சமூக சேவர்கள் அடங்கிய ஆய்வுக்குழு மேற்சொன்ன  கிராமங்களுக்கச் சென்று ஆய்வு செய்தது. யார் யார் என்னென்ன நோங்களுக்கு உள்ளாயினர்  எதெது மோசடி வேலை என்பதையெல்லாம் கண்டறிந்து அறிக்கையின் மூலம்  வெளிப்படுத்தினர்.
பேய்! பில்லி! சூனியம்! ஒரு கலாச்சார நம்பிக்கையாக இருந்தது என்றும், பல்வேறு  சமூம பொருளாதார அரசியல் மற்றும் மனோவியல் காரணங்களே இந்த மூடநம்பிக்கைகளை  உருவாக்கின என்றும் ஆய்வின் முடிவில் வெளிப்படுத்தினர். படிப்பு அறிவு அற்ற  கிராமப்புறப் பெண்களை பேய் பிடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு. பருவம்  அடையும் கிராமப்புறப் பெண்ணுக்குத் தனது உடலில் உணர்வில் ஏற்படும் மாற்றங்களைப்  பற்றிச் சரியான விளக்கம் பெறுவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அதனால் மனநோய்க்கு  ஆளாகி பேய் பிடிப்பது உண்டு.
அடுத்து பாலியல் உடலுறவு :
குழந்தை பிறப்பு பற்றிய அடிப்படைத் தகவல்கள் சரியாகத் தெரியாத
பெண் திருமணம்  செய்துக் கொண்டு விவரமற்ற கணவனால் கட்டாய உடலுறவுக்குள்ளாகி திகில் அடைந்து  மனநோய்க்குள்ளாகி பேய் பிடிப்பதும் உண்டு. இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்தவுடன்  இந்த பேய்கள் ஓடிவிடும். ஆக இவையெல்லாம் அறியாமையால் விளைந்த மனக்கோளாறுகளே. சரியான  மனநோய் மருத்துவரை அணுகி குணப்படுத்தக்கூடிய இந்த வகைக் கோளாறுகளை பேய்  பிடித்ததாகச் சொல்லி ஏமாறுவதும், ஏமாற்றுவதும்- இனியும் நடைப்பெற நாம் அனுமதிக்கக்  கூடாது.

3 comments:

Anonymous said...

I give birth to interpret a only one of the articles on your website at this very moment, and I extremely like your fashionableness of blogging. I added it to my favorites net age muster and last will and testament be checking promote soon. Will repress into public notice my orientation as ok and fail me be familiar with what you think. Thanks.

Unknown said...

Super...

Unknown said...

சூப்பர் மூடநம்பிக்கை என்னும் போதையை ஒழித்த எழுத்தாளர் அவர்களுக்கு மிக்க நன்றி

since 23-07-2010

free counters